தினகரன் 07.09.2010
வீடு,வணிகம்,தொழிலுக்கு உயர்த்தப்பட்ட வரி வசூலிக்க அவினாசி பேரூராட்சிக்கு தடை
சென்னை, செப்.7: உயர்த்தப்பட்ட வீட்டு வரி, வணிகம் மற்றும் தொழில் வரி வசூலிக்க அவினாசி பேரூராட்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி நகர் மக்கள் நல மேம்பாட்டு சங்க தலைவர் விஜய் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் வீட்டு வரி, தொழில் வரி, வணிக வரி 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. வரி உயர்வு கடுமையாக இருந்தால், அதை குறைத்துக் கொள்ள அந்தந்த பேரூராட்சிகள் தீர்மானம் கொண்டு வரலாம் என்று தமிழக அரசு 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அவினாசி பேரூராட்சியில் வரி குறைக்க தீர்மானம் போடப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதுவரை வரி குறைப்பு தொடர்பாக, அரசிடம் இருந்து அனுமதி வரவில்லை. உயர்த்தப்பட்ட வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், அவினாசி பேரூராட்சி வரி வசூலிப்பில் பழைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நகராட்சி துறை செயலாளர், திருப்பூர் கலெக்டர், அவினாசி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட 5 பேர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.