தினமலர் 31.08.2010
வரி சீரமைப்புக்கான மேல்முறையீட்டு குழு : கரூர் நகராட்சி கமிஷனர் விளக்கம்
கரூர்: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில், பெத்தாச்சி மன்றத்தில் நடந்தது. கமிஷனர் உமாபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:கவுன்சிலர் மாரப்பன்(தி.மு.க.,): நகராட்சியில் வரி தொடர்பான மேல்முறையீட்டு குழு செயல்படுகிறதா? வரி திருத்தம் கோரி மனு அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?கமிஷனர் உமாபதி: நகராட்சி பகுதியில் ஏற்கனவே தகுதிவாரியாக வரையறுக்கப்பட்ட, மூன்று பிரிவுகளில் உள்ள பகுதியை பொறுத்து கட்டிட வரி நிர்ணயிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு குழு தற்போதும் உள்ளது. ஆனால், இதற்கு முறையான விண்ணப்பம் அளித்தால் குழுவின் பார்வைக்கு செல்லும். முறையீட்டு மனுவில், வரி நிர்ணயித்தலில் உள்ள குறைபாட்டினை சரியாக குறிப்பிட்டு அளிக்க வேண்டும்.மனுவை ஆய்வு செய்து, குழுவுக்கு அளிப்பது குறித்து, மனுவின் தகுதி அடிப்படையில் முடிவு செய்ய கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. தகுதியில்லாத விண்ணப்பம், குழு பார்வைக்கு அனுப்புவது இல்லை. அதே சமயம், மனுவில் உள்ள குறைபாடு குறித்து சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.மணிராஜ்(தி.மு.க.,): மனு தள்ளுபடியாவது குறித்து மனுதாரருக்கு விளக்கம் அளிக்கப்படுவதுபோல், சம்மந்தப்பட்ட கவுன்சிலருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.கதிரவன்(தி.மு.க.,): இரட்டை வாய்க்கால் சீரமைப்பு பணி நட க்கும் போது, சிலர் தங்கள் கட்டிடங்களில் இருந்து "பிவிசி' குழாய் மூலம் நேரடியாக வாய்க்காலில் கழிவுநீர் கொட்டுகின்றனர்.
கமிஷனர்: உடனடியாக அத்தகைய குழாய் அனைத்தும் அடைக்கப்படும்.கதிரவன்: மக்கள்பாதை பாலம் ஏற்கனவே இருந்ததைவிட சிறிய அளவில் தற்போது கட்டப்படுகிறது. விரிவாக்கப்படவில்லை என்றாலும், ஏற்கனவே இருந்த அளவிலாவது பாலம் வேண்டும்.கமிஷனர்: குறைபாடு சரி செய்யப்படும்.மணிராஜ்: கரூர் பஸ் ஸ்டா ண்ட் இலவச கழிப்பிடம் சுத்த ம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. நடவடிக்கை தேவை.கமிஷனர்: இதற்கான டெண்டர் பலமுறை வைக்கப்பட்டும் எவரும் எடுக்கவில்லை. நகராட்சி சுகாதாரத்துறை மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.தொடர்ந்து அவசர கூட்டம் நடந்தது.கூட்டத்தில், 35 தீர்மானங்கள் வைக்கப்பட்டதில், கரூர் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் குறித்தானவை மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டுகள் 28, 18 ஆகியவற்றில் சின்டெக்ஸ் தொட்டியுடன் ஆழ்குழாய் கிணறு வசதி மற்றும் வார்டுகள் 29, 32 மற்றும் 30 ஆகியவற்றில் பயணிகள் நிழற்குடை குறித்தான அனைத்து தீர்மானமும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.