தினமணி 01.04.2010
சென்னை மாநகராட்சி வரி வசூல் ரூ.490 கோடி
சென்னை, மார்ச் 31: 2009-10 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக சென்னை மாநகராட்சி ரூ.490 கோடி வசூல் செய்துள்ளது.இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.76 கோடி கூடுதலாகும்.
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு நிதியாண்டும் சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவை முழுமையாக வசூலிக்கப்படாமல், பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது.
இந்த நிலுவை வரி மற்றும் உடனுக்குடன் சொத்து வரி செலுத்துவதை உறுதி செய்யவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
முழுவதும் கம்ப்யூட்டர் மயம், எஸ்.எம்.எஸ். மூலம் சொத்து வரி விவரங்களைத் தெரிவிப்பது, சொத்து வரி நிலுவை குறித்து நேரடியாகவும், நோட்டீஸ் மூலமும் பொது மக்களுக்குத் தெரிவிப்பது, பூட்டப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்கள், கடைகளின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது.இந்த நடவடிக்கைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் வரி வசூல் அதிகரித்துள்ளது. 2008-09 நிதியாண்டில் சொத்து வரி ரூ.323 கோடியும், தொழில் வரி ரூ.91 கோடியும் (மொத்தம் ரூ.414 கோடி) வசூலிக்கப்பட்டது.
இந்த நிதியாண்டில் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.350 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ரூ.363.83 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி வசூல் இலக்கு ரூ.101 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ரூ.126 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான புதன்கிழமை (மார்ச் 31) ரூ.20 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், வரி உயர்வு செய்யாமல், முதன் முறையாக சென்னை மாநகராட்சியின் வரி வசூல் ரூ. 490 கோடியைத் தொட்டுள்ளது.இந்த நிதியாண்டில் சொத்து வரி செலுத்தாத 86 ஆயிரம் வணிக நிறுவனங்களுக்கும், 10 லட்சம் தனி நபர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.