தினமலர் 01.04.2010
சொத்து வரி வசூலிப்பில் ரூ.12 கோடி கூடுதல் வருவாய் : நிர்ணயித்த இலக்கையும் தாண்டி மாநகராட்சி அசத்தல் சாதனை!
சென்னை : சென்னை மாநகராட்சி, சொத்து வரியாக 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் நிர்ணயித்த அளவையும் தாண்டி 12 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளது.
சென்னை நகரில் உள்ள ஐந்து லட்சத்து 20 ஆயிரம் கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரியை உயர்த்தாமல், சொத்துவரி வசூலிக்கும் முறையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2009-10ம் நிதி ஆண்டில், 350 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்தது. மார்ச் மாதம் 30ம் தேதி வரை 342 கோடி ரூபாய் வசூலானது.இறுதி நாளான நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டும் வகையில், 20 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூல் செய்தனர்.
சொத்து வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரி பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்டடங்களில், பாக்கி தொகை குறித்து டிஜிட்டல் பேனர் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். 400 கட்டடங் களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.
இதனால், சொத்து உரிமையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சொத்து வரியை கட்டினர். இதனால், சொத்து வரி வசூலிப்பு தொகை அதிகமானது. அதிகளவில் சொத்து வரி பாக்கி வைத் திருந்த சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததோடு, எச்சரிக்கை நோட்டீஸ்களை கட்டடங்களில் ஒட்டி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பாரிமுனை, பெரியமேடு, திருவல்லிக் கேணி பகுதியில் ஜப்தி நடவடிக்கை மேற் கொண்டு அதிரடியாக சொத்து வரி வசூலிக்கப் பட்டது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி கூடுதலாக வரி வசூலித்து மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
வரும் நிதியாண்டில் 2010 -11ல் 375 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி மூலம் கடந்த 2009 -10 ஆண்டில் 101 கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மார்ச் 30ம் தேதி வரை 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொழில் வரி வசூலிப்பை அதிகப்படுத்த, மாநகராட்சி வருவாய்த் துறையினர், நகரில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிப் பட்ட முறையில் செயல்படும் நிறுவனங்கள் என கண்டறிந்து 86 ஆயிரம் பேருக்கு தொழில் வரி கட்டும்படி நோட்டீஸ் அனுப்பியது. ஏராளமானவர்கள் முன்வந்து தொழில் வரி செலுத்தியதால், தொழில் வரி வசூல் அதிகமானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.