தினமலர் 31.03.2010
இன்று வரி செலுத்த கடைசி நாள் பொது இடத்தில் பெயர் பட்டியல் : தி.மலை நகராட்சி எச்சரிக்கை
திருவண்ணாமலை : 'கடைசி நாளான இன்று வரி பாக்கி செலுத்த தவறினால், அது குறித்த பட்டியல்கள் பொது இடத்தில் வைக்கப்படும்' என்று தி.மலை நகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, திருவண்ணாமலை நகராட்சி கமிஷனர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவண்ணாமலை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை உரிமங்களுக்கான கட்டணம் செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள நபர்கள், வரும் 31ம்தேதிக்குள் (இன்று) கம்ப்யூட்டர் மையத்திலோ, நடமாடும் வரி வசூல் வாகனத்திலோ செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.31ம் தேதி வரி செலுத்த தவறுபவர்களின் பெயர் மற்றும் விவரங்களுடன், வரி விதிப்பு எண் நிலுவை தொகையுடன் அனைத்து பத்திரிகைகளிலும், பொது இடங்களிலும் நகராட்சியிலும் விரிவாக விளம்பரம் செய்யப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.