Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

டிராக்டரில் ஒலி பெருக்கி அமைத்து பேரூராட்சியில் அதிரடி வரி வசூல்

Print PDF

தினமலர் 26.03.2010

டிராக்டரில் ஒலி பெருக்கி அமைத்து பேரூராட்சியில் அதிரடி வரி வசூல்

பள்ளிப்பட்டு : பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரியை, டிராக்டரில் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து கொண்டே அதிரடியாக வசூலிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு குடிநீர் வசதிக்காக தெருக்களில் குடிநீர் குழாய்கள் அமைத்துள்ளனர். மேலும் 1,400 வீடுகளுக்கு தனியாக அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்டு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 ஆண்டுகளாக கட்டணம் செலுத்தவில்லை. இந்த வகையில், பேரூராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டிய தொகை, இம்மாதம் 10 தேதி வரை 35 லட்சம் ரூபாயை தாண்டியது.அதிக வரி பாக்கி உள்ள பேரூராட்சிகளில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி முதலிடம் வகித்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் உத்தரவுப்படி பொதட்டூர் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், டிராக்டரில் ஒலி பெருக்கி அமைத்து தெருத் தெருவாக சென்று அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டார். குடிநீர் வரி பாக்கி உள்ளவர்கள் இணைப்பை துண்டித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டிப்பு செய்ததன் விளைவாக ஒன்பது லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. சிலர் அட்வான்ஸ் பணம் செலுத்தாமல் குடிநீர் இணைப்பை அமைத்திருந்தனர். அவர்களின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Last Updated on Friday, 26 March 2010 05:47
 

ராஜ்பவன் பகுதி குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு 'கட்!': வரி செலுத்தாததால், நகராட்சி நிர்வாகம் அதிரடி

Print PDF

தினமலர் 26.03.2010

ராஜ்பவன் பகுதி குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு 'கட்!': வரி செலுத்தாததால், நகராட்சி நிர்வாகம் அதிரடி

ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பலரின் தண்ணீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது; 1989ம் ஆண்டு முதல், குடியிருப்புகளுக்கு விதிமீறி இணைப்பு எடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ராஜ்பவன் பகுதியில், அரசு குடியிருப்புகள் 88 கட்டப்பட்டுள்ளன; 1989ம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது, ராஜ்பவன் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களை தவிர, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக, இப்பகுதியில் வசிப்பவர்கள், பொதுப்பணித்துறை சார்பிலோ அல்லது குடியிருப்போர் சார்பிலோ, தண்ணீருக்கு வரி கட்டவில்லை. ஆனால், மின்கட்டணம், வீட்டு வாடகைக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போதுள்ள நகராட்சி நிர்வாகம், தண்ணீர் உட்பட சொத்து வரி வசூலிப்பதில் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஆய்வில், ராஜ்பவன் பகுதியில் உள்ள 88 குடியிருப்புகளில், வருவாய் அலுவலர் குடியிருப்பு உட்பட அனைத்து குடியிருப்பிலும் தண்ணீர் வரி கட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், 2000ம் ஆண்டு முதல் செலுத்த வேண்டிய தண்ணீர் வரி மட்டும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 944 ரூபாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஒரு வீட்டுக்கு 8,488 ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பலர் பல்லாண்டுகளாகவும், சிலர் ஓராண்டாகவும் வசித்து வருவதால், தொகையை செலுத்த முடியாது எனக் கூறியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை பொறியாளர் அலுவலகத்தில் புகார் செய்த போது, தண்ணீர் பயன்படுத்தியவர்களிடம் வரி வசூல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னும் வரி வசூலிக்க முடியாததால், மாவட்ட வருவாய் துறை அலுவலர் குடியிருப்பு உட்பட 88 குடியிருப்புகளுக்கான தண்ணீர் இணைப்பு, இரு நாட்களுக்கு முன் துண்டிக்கப்பட்டது. விசாரணையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ராஜ்பவன் கட்டடத்துக்காக தனியாக வழங்கப்பட்ட ஒரு குழாய் இணைப்பு, குடியிருப்பில் உள்ளவர்கள் விதிமீறி, அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைப்பை கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என, நகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அரசுத் துறையை சேர்ந்தவர்களே, விதிமீறி செயல்பட்டது, வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி கமிஷனர் கிரிஜாவிடம் கேட்டபோது, ''ராஜ்பவன் பகுதியில் உள்ள 88 குடியிருப்புகளில் வசிப்பவர்கள், கடந்த 30 ஆண்டுகளாக தண்ணீர் வரி கட்டவில்லை. தண்ணீர் இணைப்பு எடுத்துள்ளதிலும் விதிமீறல் நடந்துள்ளது; இதனால், இணைப்பு துண்டிக்கப்பட்டது. வரி செலுத்தினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும்,'' என்றார்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை: இரு நாட்களாக தண்ணீர் கிடைக்காததால் அவதிப்பட்ட ராஜ்பவன் குடியிருப்பு மக்கள், நேற்றுமுன்தினம் காலி குடங்களுடன் பொதுப்பணித் துறை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 'முன்னறிவிப்பு இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கோடை காலத்தில் தங்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது' என கோஷம் எழுப்பினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு, இப்பிரச்னை குறித்து விசாரித்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் குடிநீர் செலுத்தவில்லை; இதனால் தான் நகராட்சி அதிகாரிகள் வினியோகத்தை நிறுத்தி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Last Updated on Friday, 26 March 2010 05:43
 

ஆனைமலையில் வரி வசூல் தீவிரம்

Print PDF

தினமலர் 26.03.2010

ஆனைமலையில் வரி வசூல் தீவிரம்

பொள்ளாச்சி: ஆனைமலையில் 100 சதவீதம் வரி வசூலிக்கதீவிர முயற்சி நடக்கிறது என பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் திட்டம் சீராக பராமரித்து செயல்படுத்த வரி மிகவும் வசியமாக உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகைதாரர்களின் உரிம கட்டணம், கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நிலுவையின்றி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இந்தாண்டில் 100 சதவீத வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தற்போது 90 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. நடப் பாண்டு முடிவடைய இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் உரிய வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை யை தவிர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 26 March 2010 05:27
 


Page 95 of 148