Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வியாபார உரிமக் கட்டணத்தைக் குறைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி 19.03.2010

வியாபார உரிமக் கட்டணத்தைக் குறைக்க மாநகராட்சி முடிவு

சென்னை, மார்ச் 18: பல மடங்காக உயர்த்தப்பட்ட வியாபார உரிமக் கட்டணத்தை, குறைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்றவுடன் புதியக் கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

சென்னை மாநகராட்சி வியாபார உரிமக்கட்டணமாக ரூ. 250, குப்பை வரி மற்றும் உணவுக் கட்டணமாக ரூ. 120 என மொத்தம் ரூ. 370 வியாபாரிகளிடம் இருந்து வசூலித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

அதாவது 1000 சதுர அடி வரையுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமக் கட்டணம் ரூ. 2,000, குப்பை வரி மற்றும் உணவுக் கட்டணம் ரூ. 500 (உரிமக் கட்டணத்தில் 25 சதவீதம்) என மொத்தம் ரூ. 2,500 என நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சென்னையில் சில்லறை மளிகைக் கடைகள், மொத்த மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், சுய சேவை அங்காடிகள், டீக்கடைகள், ஓட்டல்கள், மாவு அரவை மையங்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.

இவைகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் 500 சதுர அடிக்கும் குறைவான இடத்தில்தான் இயங்கி வருகின்றன. எனவே இந்தக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை சார்பில் மேயர் மா. சுப்பிரமணியத்திடம் கடந்த மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உரிமக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக பேரவை நிர்வாகிகளிடம் மேயர் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அந்த நோட்டீஸில் உரிமக் கட்டணம் குறைப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

புதிய உரிமக் கட்டணம்... 500 சதுரஅடி வரை உள்ள கடைகளுக்கு ரூ. 500, 501 முதல் 1,000 சதுரஅடி வரையிலான கடைகளுக்கு ரூ. 750, 1,001 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளுக்கு ரூ. 3,000 என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அந்த நோடீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. சொரூபன் கூறியது:

இந்தக் கட்டணக் குறைப்பு, வியாபார சங்கங்களின் பிரதிநிதிகள் மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியத்திடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. இதற்கு மேயர் மற்றும் தமிழக அரசுக்கு அனைத்து வியாபாரிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதியக் கட்டணம் அமலுக்கு வருவது எப்போது என்று தெரியவில்லை. எனவே மார்ச் 31}ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமக் கட்டணத்துக்கு மே 31 வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.

இதே போல் தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சி. நவமணி, சு. மங்களராஜன், எஸ். பெரியசாமி, வி.பி. மணி, ஜி.எஸ். கமால்பாஷா, ஜி. அய்யம் பெருமாள், ஜி. ரவிச்சந்திரன், . கருணாதங்கம், . முருகேசன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated on Friday, 19 March 2010 11:02
 

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமலர் 19.03.2010

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் குடிநீர் குழாய்வரி, வீட்டுவரி செலுத்தாதவர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.தேவதானப்பட்டி பேரூராட்சியில் அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, பெருமாள்கோவில்பட்டி, பெருமாள்புரம், மஞ்சளார், காமக்காபட்டி கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும் செலுத்த வேண்டிய தண்ணீர் வரியை பலர் செலுத்தாததால் வரி பாக்கி அதிக அளவில் நிலுவையில் இருந்தது.

இவை தவிர குழாய் இணைப்புகளில் அனுமதி இல்லாமல் பலர் மின் மோட்டார் மூலம் நீரை திருடி வந்தனர். இதனால் மேடான பகுதிகளுக்கு நீர் சப்ளை செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. மார்ச் 15 க்குள் தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்துவரி செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மின் மோட்டார்களையும் அகற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செயல் அலுவலர் பாபுஜி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து வருகின்றனர். குடிநீர் குழாய்களில் அனுமதி இல்லாமல் பொருத்தப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Last Updated on Friday, 19 March 2010 06:32
 

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிய வரி வசூல் மையம் துவக்கம்

Print PDF

தினமலர் 19.03.2010

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் புதிய வரி வசூல் மையம் துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் புதிய வரி வசூல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணியை எளிமையாக்குவதற்காக செவ்வாய்ப்பேட்டை அப்புசாமி தெரு, அரிசிப்பாளையம் ராஜேந்திரா சத்திரம் பகுதி, கிச்சிப்பாளையம் மாநகராட்சி மருத்துவமனை ஆகிய இடங்களில் புதிதாக மூன்று வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடந்த ஆண்டு பொதுமக்களிடம் நேரடியாக சென்று வரி வசூல் பணியை மேற்கொள்ள புதிதாக வரி வசூல் வாகனம் வாங்கப்பட்டது. நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட ஜாரி கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே புதிய வரி வசூல் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் செயல்பட்டு வந்தது. புதிய வரி வசூல் மையத்தை சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, உதவி கமிஷனர் நெப்போலியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 19 March 2010 06:28
 


Page 98 of 148