தினமலர் 10.03.2010
வரி செலுத்த தயங்கும் வணிகர்கள்: பஜார் தெருவில் பல லட்சம் ரூபாய் நிலுவை
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பஜார் தெருவில், பெரும்பாலான வணிக நிறுவனத்தினர், சொத்து, குடிநீர், தொழில் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். சேலம் மாநகராட்சிக்கு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் கிடைத்து வருகிறது.
கடந்த 2009-10ம் ஆண்டு சொத்து வரி மூலம் 23 கோடி ரூபாயும், தொழில் வரி மூலம் மூன்று கோடி ரூபாயும், குடிநீர் கட்டணம் மூலம் 18 கோடி ரூபாயும் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. வரி வசூல் பணியை தீவிரப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நடமாடும் வரி வசூல் வாகனம் மூலம் மாநகராட்சியின் பல வார்டுகளில் முகாம் அமைத்து வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான வார்டுகளில் பொதுமக்கள் வரி செலுத்துவதில் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டும் அல்லாமல், மாநகராட்சி பகுதியின் பெரும்பாலான வணிக நிறுவனங்களும் வரி செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். வீடுகளை காட்டிலும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரி மூலமாகத்தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆனால், வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மெத்தனமாக செயல்படுவதால் சேலம் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள பகுதி பஜார் தெரு. இங்கு நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வரி இனங்கள் மூலம் இப்பகுதியில் மட்டும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால், இப்பகுதியில் கடை வைத்திருக்கும் பெரும்பாலோனோர் பல ஆண்டாக வரி செலுத்தாமல் உள்ளனர்.
மாநகராட்சி சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும் கடை உரிமையாளர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, நேற்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் தெருவில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடமாடும் வரி வசூல் வாகனம் நிறுத்தப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் பஜார் தெருவில் நிலுவை வரியை வைத்திருந்தவர்களிடம் பாக்கியை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒரு சிலர் மட்டும் வந்து வரி பாக்கியை செலுத்தி சென்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் கடை உரிமையாளர்களே வரி பணத்தை செலுத்துவதில் அலட்சியமாக இருப்பதால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது