தினமலர் 04.032010
நூறு சதவீத வரி வசூல் செய்து உதயேந்திரம் பேரூராட்சி சாதனை
வாணியம்பாடி:உதயேந்திரம் பேரூராட்சி 100 சதவீத வரி வசூல் செய்து மாவட்டத்திலேயே சாதனை படைத்துள்ளது.உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் ஆர்.ஐ., நாகராஜ் அலுவலர்கள் தேவராஜ், சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.சொத்து வரியாக 6 லட்சத்து 72 ஆயிரத்து 35ம், தொழில் வரி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 850ம், குடிநீர் கட்டணம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 320, வரியில்லா இனம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 12 லட்சத்து 18 ஆயிரத்து 205 ரூபாயை வசூல் செய்து, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதயேந்திரம் பேரூராட்சி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று முழுமையாக வரி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
உதயேந்திரம் பேரூராட்சியில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நிலுவை இல்லாமல் வரி வசூல் செய்து சாதனை படைக்க செயல்பட்ட செயல் அலுவலருக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணி, உதவியாளர் பேபி முன்னிலை வகித்தனர். பின்னர் கவுன்சிலர்கள், பணியாளர்கள் சங்க தலைவர் ரவி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பாராட்டி, பேசினர்.