தினமலர் 01.03.2010
வரி விதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் : ஆய்வு செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வரி விதிக்காமல் இருப்பதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;
மணி (காங்.,): வீடு கட்டி முடித்து ஐந்து ஆண்டுகளாகியும் அந்த வீட்டுக்கு வீட்டு வரி விதிக்கப்படாமல் உள்ளது. இதேபோல், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வரி விதிக்காததால் வருவாய் இழப்புஏற்படுகிறது.
முரளிதரன் (ம.தி.மு.க.,): வரி விதிக்காத வீடுகளை ஆய்வு செய்து வரி விதிக்க வேண்டும்.
வரதராஜ் (கமிஷனர்): வரி வசூல் பணி முடிந்ததும், வரி விதிக்கப்படாத குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து வரி விதிக்கப்படும்.
ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.,): அரசியல் கட்சிகளின் பேனர் நகரம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்தும் ஏற்படுகிறது.
வரதராஜன் (டி.பி.ஓ.,): அரசியல் கட்சி பிளக்ஸ் பேனர்களை அகற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரு சில கட்சியினர் கலந்து கொள்ளாததால் முடிவு எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி உறுதியான முடிவு எடுக்கப்படும்.
முரளிதரன்: திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் நடைபாதை கடைகள் அகற்றப் பட்ட பிறகும், முளைத்தள்ளன.
மணி: மார்க்கெட் ரோட்டில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் மீண்டும் முளைத்தால் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
டி.பி.ஓ.,: தள்ளுவண்டி, நடைபாதை கடைக்காரர்களுக்கு மாற்று இடம் கொடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகுமார் (துணைத்தலைவர்): நகரமைப்பு பிரிவில் இருந்து வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், பெண் ஊழியர்களை கேவலமாக திட்டுவதாகவும், பாலியல் ரீதியாக விமர்சிப்பதாகவும் புகார் வந்துள்ளது.
கவுதமன் (தி.மு.க.,): பெண் ஊழியர்கள் இது தொடர்பாக கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளனர். பெண்களுக்கு இடையூறு செய்யும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: பெண் ஊழியர்களை தொந்தரவு செய்பவரை மாற்றம் செய்ய வேண்டும்.
கமிஷனர்: எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முரளிதரன்: நகராட்சி பெண்கள் பள்ளியின் பழைய இடம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறதா, அல்லது வணிக வளாகம் கட்டப்படுகிறதா?
டி.பி.ஓ.,: அரசு தான் இந்த பிரச்னையில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கவுன்சில் கூட்டத்தில் விவாதம் நடந்தது.