தினமலர் 15.02.2010
வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்த ஈரோடு கலெக்டர் வலியுறுத்தல்
ஈரோடு: ஈரோடு மாவட்ட பஞ்சாயத்துகளில் வசிப்போர் இதுவரை வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை என்றால், வரும் 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கலெக்டர் சுடலைகண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ரோடு மாவட்டத்துக்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் 2009-10ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை பஞ்சாயத்துக்கு செலுத்திட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 10 மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பஞ்சாயத்துக்கு வரி செலுத்தாதவர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிலுவையின்றி செலுத்திட வேண்டும்.
வரிகளை செலுத்த தவறும் பட்சத்தில் 1994ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவு, 172,174 மற்றும் உட்பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு அரசு ஆணை 260 ஊரக வளர்ச்சித் துறையின்படி முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும். துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்படமாட்டாது. எனவே, உரிமையாளர்கள் தங்களது வரிகளை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.