தினமணி 21.11.2009
பேரூராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்
தஞ்சாவூர், நவ. 20: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
பொதுமக்கள் சொத்துவரி செலுத்துவதில் தாமதம் செய்வதால் சில அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.
சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் விரைந்து செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் வெள்ள சேதங்கள் ஏற்படாதவாறு அதிகாரிகள் கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் சண்முகம்.
பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோகரன் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.