மாலை மலர் 19.09.2009
மதுரை மாநகராட்சியில் கிழக்கு மண்டல பகுதிகளில் வரிவிதிப்பு சிறப்பு முகாம் 22-ந்தேதி நடக்கிறது மதுரை, செப். 19-
மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட் பட்ட வார்டு எண்.49, 54 மற்றும் 55 ஆகிய வார்டு பகுதிகளில் புதிய வரி விதிப்பிற்கான சிறப்பு முகாம் வருகின்ற 22-ந்தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு உடனடியாக வரிவிதிப்பு செய்யவும், கிரையப் பத்திரங்களின் அடிப்படையில் பெயர் மாற்றம் பரிசீலனை செய்ய வும், வீட்டு வரி தொடர்பான இதர குறைகளை பரிசீலனை செய்து உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் 1.தங்களின் வீடுகளுக்குரிய முழு கட்டிட அளவு விபரங்களுடன் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் பெறப்பட்ட பத்திர நகல், கூடுதல் கட்டிடம் இருப்பின் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டதற்கான ரசீது நகல், 2.பொட்டல் வரி செலுத்தியதற்கான ரசீது நகல், 3. கட்டிட வரைபட அங்கீகாரம் பெற்றிருப்பின் அதற்கான வரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த சிறப்பு முகாமில் மேற்கண்ட குறைகள் தொடர்பான அனைத்து அலுவலர்களும் ஒரே இடத்திற்கு வருகை புரிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய் கின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இடைத் தரகர்கள் யாருமின்றி பொதுமக்கள் நேரிடையாக இந்த முகாமினை பயன் படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.