Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்துவோரில் 50% பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர் .

Print PDF

தினமணி 17.09.2009

வரி செலுத்துவோரில் 50% பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.

மதுரை, செப். 16: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வரி செலுத்துவோரில் 50 சதவீதம் பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் வரி செலுத்துகின்றனர். ஆனால் 64 ஆயிரம் பேர் மட்டுமே பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.

வரி செலுத்தும் அனைவருக்கும் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

90 சத வரி வசூல்: நகர் முழுவதும் 90 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுவிட்டது.

அரசுக் கட்டடங்கள் மூலம் மட்டுமே ரூ. 9 கோடி வரி நிலுவையில் இருந்தது. அதில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 1 கோடி வசூலிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள ரூ. 8 கோடி இம்மாத இறுதிக்குள் வசூலிக்கப்பட்டுவிடும்.

மத்திய அரசு நிதியுதவியுடன் மதுரை நகரில் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிப்பறை வசதியின்றி 4,500 வீடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவருகிறது. கழிப்பறை வசதியில்லாத வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டு, கழிப்பறை கட்டப்படவுள்ளது.

இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ஆணையர்.

தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல் கூறியது:

வைகை மாசடைவதை தடுக்க திட்டம்: திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களின் மூலம் வைகை நதி மாசடைவது தடுக்கப்படுகிறது.

மேலும், மதுரை வடபகுதியில் உள்ள பந்தல்குடி மற்றும் வண்டியூர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைகையாற்றில் கலப்பதைத் தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேற்கண்ட இரு கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரைக் குழாய் மூலம் சக்கிமங்கலம் கழிவுநீரேற்று நிலையத்துக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் ரூ. 9.40 கோடியில் புதிய திட்டம் பொதுப்பணித் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும்.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ் நகரின் தென்பகுதியில் உள்ள அனுப்பானடி, சொட்டதட்டி, பனையூர், கிருதுமால், சிந்தாமணி, அவனியாபுரம் உள்ளிட்ட 7 கால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீரை ஏரிகளில் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றார் .

Last Updated on Thursday, 17 September 2009 05:55
 

தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

Print PDF

னமணி 16.09.2009

தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அபராதம்

கோவை, செப்.15: தெருவில் குப்பை கொட்டிய கடைக்காரர்களுக்கு கோவை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.

பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்த பிறகு கடைகள், நிறுவனங்களில் இருந்து குப்பைகளை தெருக்களில் கொட்டிவிடுகின்றனர்.

கழிவுப் பொருள்களை குப்பைத் தொட்டியில் கொட்டாமல், தெருக்களில் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் சுமதி தலைமையில் சுகாதாரத் துறையினர் பெரிய கடைவீதி, ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது தெருக்களில் குப்பை கொட்டிய 23 கடைகளுக்குத் தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.

Last Updated on Wednesday, 16 September 2009 10:54
 

சொத்து வரியை 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் .

Print PDF

தினமணி 16.09.2009

சொத்து வரியை 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் .

சென்னை, செப். 15: அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: 2009-10-ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை, நிலுவைத் தொகையுடன் சேர்த்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

வரியை காசோலை அல்லது கேட்புக் காசோலையாக "வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி' என்ற பெயரில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் செலுத்தலாம். அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனிலும் வரியை செலுத்தலாம்.

Last Updated on Wednesday, 16 September 2009 10:53
 


Page 137 of 148