Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்

Print PDF
தினகரன்         08.03.2013

திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள், சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை எளிதில் செலுத்தும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரலில் இருந்து செப்., வரை முதல் தவணை, அக்., இருந்து மார்ச் வரை இரண்டாவது தவணையாக வரி செலுத்த வேண்டும். தற்போது இரண்டாவது தவணை காலம் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், பல கோடி ரூபாய் வரியினங்கள் வசூலிக்கப்படாமல் உள்ளது.

சொத்து வரி சுமார் 8 கோடி ரூபாய், தொழில் வரி ஒரு கோடி, குடிநீர் கட்டணம் 5 கோடி, கடை வாடகை மற்ற வரி இனங்கள் இரண்டு கோடி ரூபாய் என மொத்தம் சுமார் 16 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி நிதியாண்டு முடியும் தருவாயில் உள்ளது. பல்வேறு வரியினங்கள் பட்டியலில், இன்னும் சுமார் 16 கோடி ரூபாய் வசூலாகாமல் உள்ளது. வரியினங்களை செலுத்த வசதியாக, மாநகராட்சி அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் எட்டு ஊராட்சி அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்கள் ஏழு நாட்களும் செயல்படும்.

பொதுமக்கள் உடனடியாக வரியினங்களை செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால், குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,‘‘ என்றார்.

இந்நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் வரி ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வரி செலுத்தும் போது கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
 

சொத்துவரி ரசீதில் முகவரி குளறுபடி

Print PDF
தினமணி              07.03.2013

சொத்துவரி ரசீதில் முகவரி குளறுபடி


சொத்து வரி ரசீதில் முகவரி மாற்றி அச்சிட்டுத் தரப்படுவதால் சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதியினர் குழப்பத்தில் உள்ளனர்.

முதலில் 10 மண்டலங்களாக இருந்த சென்னை மாநகராட்சி, அருகில் இருந்த நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து 15 மண்டலங்களாக விரிவாக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை, சுகாதாரம், துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. இது அந்தப் பகுதிகளின் வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

சென்னை நகரில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுவதற்கு பல கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டததால் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சொத்து வரி ரசீது: இந்த நிலையில், சொத்து வரி செலுத்தும் முறையை மாநகராட்சி கணினி மயமாக்கியுள்ளது. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இந்த வசதி முழுமையாக சென்றடையவில்லை. சில மண்டலங்களில் பழைய முறைப்படியே சொத்து வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கணினி மயமாக்கப்பட்ட சில விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தவறான முகவரி அச்சிட்டுத் தரப்படுகிறது. கணினியில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்றும், அடுத்தமுறை வரி செலுத்தும்போது இந்த பிரச்னை சரி செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012-13 நிதியாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், இந்த முகவரி குழப்பத்தால் இரண்டாவது தவணை சொத்து வரியை செலுத்துவதில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியினர் பெரும்பாலும் ஆர்வம் செலுத்தவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்தப் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கணினி மயமாக்கும் வசதிகள் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ரசீதில் உள்ள முகவரியை மாற்றக்கோரி பலமுறை மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இந்த முகவரி குளறுபடியால் மீண்டும் வரி செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டு விடுமோ என்ற குழப்பம் நிலவி வருகிறது என்று தெரிவித்தனர்.

இணையதளம்: மாநகராட்சி இணையதளத்தில் சொத்து வரி செலுத்தும்போது, வரி செலுத்துநரின் தொலைபேசி எண் கேட்கப்படுகிறது. ஆனால் இந்த வசதி கூட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு இல்லை.

அதில் பழைய சென்னை மாநகராட்சிப் பகுதிகளின் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மட்டும் தங்களது செல்போன் எண்களை பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

பல்வேறு வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், அந்த பகுதி மக்கள் சென்னை மாநகராட்சியுடன் தங்கள் பகுதி சேர்க்கப்பட்டது வீண் என்று கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 

போடி நகராட்சி 100 சதவீத சொத்து வரி வசூலித்து சாதனை

Print PDF
தினமணி              07.03.2013

போடி நகராட்சி 100 சதவீத  சொத்து வரி வசூலித்து சாதனை


போடி நகராட்சி, சொத்து வரியை 100 சதவீதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில், 17,700-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு நகராட்சி சார்பில் சொத்து வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டு வருகிறது.

 2012-2013 ஆம் நிதியாண்டுக்கான சொத்து வரி ரூ. 1 கோடியே 50 லட்சத்து 10 ஆயிரத்து 607 வசூல் செய்யவேண்டும்.

 இதில், போடி நகரில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் டவருக்கான சொத்து வரி செலுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்த நிலையில், இந்த ஆண்டுக்கான சொத்து வரி கேட்பு ரூ. 1 கோடி 49 லட்சத்து 94 ஆயிரத்து 371 வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 அதன்படி, போடி நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா, மேலாளர் ப. பிச்சைமணி, கணக்காளர் முருகதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்பேரில், வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான வரி வசூல் குழுவினர் தீவிரமாக சொத்து வரி வசூலில் ஈடுபட்டனர். இதில், பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடி 49 லட்சத்து 94 ஆயிரத்து 371 வசூல் செய்து, 100 சதவீத வசூல் சாதனை எட்டப்பட்டுள்ளது.

 வரி வசூலில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் நகராட்சி ஊழியர்களை, நகர்மன்றத் தலைவர் வி.ஆர். பழனிராஜ், துணைத் தலைவர் ஜி. வேலுமணி, ஆணையர் எஸ். சசிகலா, பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். மேலும் வரி வசூல் மூலம், போடி நகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சேபணை தெரிவித்துள்ள செல்போன் நிறுவனத்துக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சில தினங்களில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆணையர் தெரிவித்தார்.
 


Page 26 of 148