தினமலர் 27.08.2012
சொத்து வரி பெயர் மாற்றம் கூடுதல் கட்டணம் ரத்து
சென்னை : சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்துடன், சில பகுதிகளில் கூடுதல் நிதி வசூலிப்பது ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.மூன்று முதல், 14 வரையிலான, 12 வார்டுகள் திருவொற்றியூர் நகராட்சியில் இருந்து, மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள். இங்கு சொத்து வரி பெயர் மாற்றத்தின்போது, ஐந்து லட்ச ரூபாய் வரை, 500 ரூபாயும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு லட்சத்திற்கும், 100 ரூபாய் குடிநீர், 100 ரூபாய் கழிவுநீர் கட்டண வரி என, செலுத்த வேண்டியுள்ளது.
இது குறித்து, மண்டலக்குழு தலைவர் தனரமேஷ், மாநகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.மேயர் சைதை துரைசாமி, ""திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது, போடப்பட்ட தீர்மானத்தின்படி, கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, மாநகராட்சி கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.
""மாநகராட்சியின், 200 வார்டுகளிலும், எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, ஒரே மாதிரியான விதிமுறைகள் மட்டுமே பின்பற்றப்படும்,'' என்றும் மேயர் உறுதி அளித்தார்.