Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரைவில் உலகத்தரத்தில் சாலைகள் : மதுரையில் மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர்     14.05.2010

விரைவில் உலகத்தரத்தில் சாலைகள் : மதுரையில் மாநகராட்சி ஆலோசனை

மதுரை; ''மதுரையில் உலகத்தரத்தில் சாலைகள் அமைப்பது பற்றி கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின், நிருபர்களிடம் கமிஷனர் கூறியதாவது: பாதாள சாக்கடை, இரண்டாவது வைகை குடிநீர் திட்டம், மழைநீர் கால்வாய் திட்டப் பணிகள் முடிந்த பிறகு, புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி நிதியின் கீழ், உலகத் தரத்தில் இவை அமைக்கப்படும். அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், நகரம் முழுவதும் உள்ள சிறு சந்து முதல் பெரிய ரோடு வரை ஆய்வு செய்கின்றனர். இரண்டு மாதங்களில் அறிக்கையை இவர்கள் சமர்ப்பிப்பர்.அமைக்கப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு இச்சாலைகள் தோண்டப்பட மாட்டாது. இதனால், மாநகராட்சி, மின்வாரியம், டெலிபோன், போக்குவரத்து போலீஸ் துறைகளைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இவர்களது தேவை என்னவாக இருக்கும் எனவும் கேட்கப்பட்டது. இச்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, யாரும் அவற்றை தோண்டக் கூடாது. ரோட்டின் ஓரங்களில் கேபிள்களை பதிக்க, தனி பாதை அமைக்கப்படும். ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நிதி ஒதுக்கப்படும்.

புதிய இடத்திற்கு செல்வதற்காக சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் டெபாசிட் செலுத்த துவங்கி உள்ளனர். தரைக் கடை வியாபாரிகளின் உண்மைத் தன்மையை அறியும் பணி நடக்கிறது. இக்குழு அறிக்கை தந்த பிறகு, கடைகள் ஒதுக்கப்படும். அனுமதி பெறாமல், ரோட்டை தோண்டி கேபிள் பதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் சில இடங்களில் மாநகராட்சியின் எல்லை எது? பஞ்சாயத்து எல்லை எது என தெரியவில்லை. அதுபோன்ற இடங்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். மதுரையில் பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் மாசு அதிகம் ஏற்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, மாசு குறைந்து, சிறந்த நகரமாக மதுரை மாறும்.

அடுத்த வாரம் முதல் மண்டல வாரியாக, நகரை சுத்தப்படுத்தும் பணி துவங்கும். இதில் மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் இணைந்து செயல்படும். பொதுமக்களும் மாநகராட்சிக்கு ஒத்துழைத்து, தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் முருகேசன், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், நிர்வாக பொறியாளர் சேதுராமலிங்கம் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 14 May 2010 06:51