தினகரன் 02.06.2010
கூத்தாநல்லூர் பகுதியில் ரூ.2.11 கோடியில் சாலை சீரமைப்பு
நீடாமங்கலம், ஜூன் 2: கூத்தாநல்லூர் நகராட்சியில் ரூ.2.11 கோடியில் 22 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளது என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணை தலைவர் காதர் உசேன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம்:
மாரியப்பன்(இந்திய கம்யூனிஸ்ட்): குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்காத ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை வழங்கக்கூடாது.
சதீஷ்(திமுக): கூத்தாநல்லூர் பகுதிகளில் பயணிகள் நிழற் குடை அமைக்க வேண்டும்.
மாரிமுத்து, காயாரோகனம்(திமுக): நகராட்சியின் பழுதாகும் மின்விளக்குகளை உடனே சீரமைக்கவேண்டும்.
ரவி(அதிமுக): சுடுகாட்டு பாதையை சரி செய்து, அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
பரிதாபேகம்(திமுக): நகராட்சியில் உடனடியாக இலவச கலர் டிவி வழங்கவேண்டும்.
பாத்திமா(சுயே.): கூத்தாநல்லூரில் ரேடியோ பார்க் புதுப்பிக்க வேண்டும்.
கனகா (சிபிஐ): வள்ளுவர் காலனி சுற்றுபுறத்தை சுத்தப்படுத்தவேண்டும்.
அப்துல்: எனது வார்டுக்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் என்று கூறி அணிந்திருந்த தொப்பியை கழட்டினார்.
மீரான்மைதீன் (அதிமுக): விண்ணப்பித்தோருக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
சமீர்(காங்.): இறைச்சி மார்க்கெட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விடுபட்டோருக்கு கலைஞர் காப்பீடு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
துணை தலைவர் காதர் உசேன் பதிலளிக்கையில், கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக ரூ.1.36 லட்சத்திலும், 2ம் கட்டமாக ரூ.75 லட்சத்திலும் மொத்தம் ரூ.2.11 கோடியில் 22 சாலைகள் செப்பனிடப்படவுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.