தினமலர் 03.06.2010
சர்வதேச தரத்தில் நகராட்சி சாலை அசத்தல்!: 2 மாதங்களில் முதற்கட்ட பணி
கரூர்: சர்வதேச தரத்தில் சாலை அமைக்க நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தில் கரூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு பணி முடித்து இரண்டு மாதங்களில் இதற்கான முதற்கட்ட பணி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் நகர பகுதியில் வசிக்கின்றனர். 2006 கணக்குப்படி மாநிலத்தில் 82.22 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த வாகனங்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் எனுமளவில் அதிகரித்துள்ளது. இதனால், வருங்காலத்தில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி என்பது பலமடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வாக, மாநிலத்தில் சாலைகளின் தரம் உயர்த்த முடிவானது. தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியகம் சார்பில் இப்பணிக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதற்கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் பணி முடித்த நான்கு மாநகராட்சி மற்றும் ஏழு நகராட்சிகளில் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மாநகராட்சியும், ஆலந்தூர், மயிலாடுதுறை, கரூர், இனாம் கரூர், கும்பகோணம், தஞ்சை மற்றும் வளசரவாக்கம் நகராட்சிகளில் திட்டம் முதலில் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான நிதியுதவியில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் வட்டியில்லாத கடனாக, 10 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையிலும் அளிக்கப்படுகிறது.
கரூர் நகராட்சியை பொறுத்தவரை சதுர கிலோமீட்டருக்கு 12 ஆயிரத்து 808 பேர் என்ற அளவில் மக்கள் நெருக்கம் உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 76 ஆயிரத்து 336 எனவுள்ளது. மேலும், தினசரி கரூர் வந்து செல்லும் மக்கள் தொகையும் இதே அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏற்ப சாலைகளிலும் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. நகராட்சி பகுதியில் 75.65 கி.மீ., நகராட்சி சாலை, 10.25 கி.மீ., தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை என மொத்தம் 85.30 கி.மீ., சாலை உள்ளது. மேலும், 74.7 சதவீதம் தார் சாலை, 15.22 சதவீதம் கான்கிரீட் சாலை, 10 சதவீதம் மண் சாலை உள்ளன. இவற்றுள் 42.08 கி.மீ., நீளத்துக்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவகர் பஜார், கோவை ரோடு, திருச்சி சாலை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் தரைப்பாலம், சர்ச் கார்னர், ரத்தினம் சாலை பகுதி என பல இடங்களிலும் வாகன நெருக்கடி மிக்க பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. சர்வதேச தரத்துக்கு சாலை கட்டமைப்பு வசதியை உருவாக்கும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தில் இச்சாலைகள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன.
அனைத்து பருவகாலத்திலும் நீடிக்கும் வகையில் நிரந்தர சாலை, நவீன தொழில்நுட்பத்தில் சாலை பணி, வாய்ப்பு உள்ள இடங்களில் கால்வாய், நடைபாதை அமைத்தல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு புல் வளர்ப்பு மற்றும் சாலையோர பூங்கா அமைப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சாலை அமைக்கும் நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தில் ஐந்து ஆண்டு பராமரிக்கப்பட்டு, நகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். சாலை மேம்பாடுக்கு தற்போதைய நிலையில் ஆக்கிரமிப்பு மட்டுமே அகற்றப்படவுள்ளன. நில ஆர்ஜிதம் திட்டத்தில் கொண்டுவரப்படவில்லை.
சர்வதேச அளவில் டெண்டர் அளிக்கப்பட்டு, குறைந்தது 25 கோடி ரூபாய் மதிப்புக்கு பகுதிவாரியாக பணிகள் பகிர்ந்தளிக்கப்படும். வடிவமைப்பு கண்காணிப்பு மேலாண்மை குழு, மாதம் இருமுறை திட்டம் செயலாக்கம் குறித்து அறிக்கை அளிக்கிறது. திட்டத்தை ஒவ்வொரு மேல்மட்ட குழுவும் அவ்வப்போது ஆய்வு செய்து, பணியை கண்காணிக்கிறது. கரூர் நகராட்சியில் சாலை வடிவமைப்பு குறித்து ஆய்வு நடத்தியுள்ள முகேஷ் அசோசியேட்ஸ் திட்ட பொறியாளர் செல்வராஜ் கூறியதாவது: மழைநீர் வடிகால், டெலிஃபோன், மின்கம்பிக்கு பிரத்யேக கால்வாய் வசதி, தேவையான மின்விளக்கு, சாலையோரம் பஸ் ஸ்டாப் என சர்வதேச தரத்தில் சாலை அமையும். பசுபதிபாளையத்தில் மேல்மட்ட பாலம், அமராவதி ஆற்றின் இருகரையோரத்திலும் சாலை, கோவை ரோடு சந்திப்பில் குகைவழி பாதை, வையாபுரி நகர் அருகே பாதசாரிகளுக்கான மேம்பாலம் என பல்வேறு திட்டங்கள் உள்ளன. நகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது பூங்காவுக்கான இடத்தை நகராட்சி அளித்தால், அதையும் முடித்துக்கொடுப்போம். எங்கள் ஆய்வு அறிக்கையை இரண்டு மாதங்களில் அரசிடம் அளித்துவிடுவோம். பின்னர் டெண்டர் அழைப்பு மற்றும் பணிகள் முறைப்படி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். கரூர் நகராட்சியின் கனவு திட்டமாக உருவெடுத்துள்ள நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டம் பணி துவங்கும் முன், இழுபறியில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கான இடம் தேர்வு நடந்தால், பொதுமக்கள் முழு பயனையும் அடைய முடியும்.