தினகரன் 07.06.2010
ரோடு விரிவாக்கத்திற்காக 7 கட்டிடங்கள் நேற்று இடிக்கப்பட்டது.
கோவை மசக்காளிபாளையம் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதில் 100 மீட்டர் தூரத்திற்கு 7 வணிக கட்டடங்கள் இருந்தது. 30 அடி அகலத்திற்கு ரோட்டை விரிவாக்க செய்ய இந்த கட்டடங்கள் இடையூறாக இருந்தது.
இந்த கட்டிடங்கள் பட்டா பெற்று, முறையாக அமைக்கப்பட்டிருந்தது. கட்டிடங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கட்டிட உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப நிலத்தை ஒப்படைக்க கட்டிட உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். நீண்ட நாட்கள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது. பின்னர், சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று ரோட்டோரத்தில் இருந்த 7 கட்டிடங்களையும் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் இடித்து அகற்றினர். இப்பகுதியில் ரோடு போடும் பணி நடக்கிறது. ஒரு வாரத்தில் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.