தினமணி 14.06.2010
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
பெரம்பலூர், ஜூன் 13: பெரம்பலூர் நகரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் ரூ. 23.5 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது 90 சத பணிகள் நிறைவடைந்துள்ளன. புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் சீரமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, பெரம்பலூர் பகுதியின் பிரதான சாலைகளான வடக்குமாதவி சாலை, ரோவர்பள்ளி சாலை, துறைமங்கலம் கே.கே.நகர், கல்யாண் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்கவில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனிடையே, பெரம்பலூர் நகரில் வெள்ளிகிழமை மழை பெய்ததால், குழிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால், மக்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனவே, சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.