Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்

Print PDF

தினகரன் 18.06.2010

ரூ.120 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும்

சென்னை, ஜூன் 18: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.120 கோடியில் சீரமைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பெரியமேட்டில் உள்ள ராஜா முத்தையா சாலையை பெயர்த்தெடுத்து புதிதாக தார் சாலை போடும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று துவங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பழைய தார் சாலைகள் மேல் புதிய சாலை போடுவதால் சாலையின் மேல் மட்டம் உயருகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதை தவிர்க்க புதிய இயந்திரம் மூலம் பழுதடைந்த சாலையை பெயர்த்தெடுத்து மீண்டும் அதே இடத்தில் மேடு பள்ளம் இல்லாமல் தார் சாலை போடப்படுகிறது. இந்த புதிய இயந்திரம் 280 எச்.பி. திறன் கொண்டது. இது ஒரு நிமிடத்துக்கு 32 மீட்டர் நீளம், 1.3 மீட்டர் அகலம் உள்ள தார் சாலையை வெட்டி அப்புறப்படுத்துகிறது.

இயந்திரத்தின் நடுவில் அரைக்கும் டிரம் பொருத்தப்பட்டுள்ளது. அரைத்து எடுக்கப்படும் துகள்கள் டிப்பர் லாரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அப்புறப்படுத்தப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் இந்த நிதி ஆண்டில் 2093 உட்புற சாலைகள் 542.26 கி.மீ. நீளத்துக்கும், 125 பேருந்து சாலைகள் 37.24 கி.மீ. நீளத்துக்கும் ரூ.120 கோடியில் புதிய தார் சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான சாலைகள் பெயர்த்தெடுத்து புதிய தார் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் எஸ்.சுரேஷ்குமார், மண்டல குழு தலைவர் எஸ்.சுரேஷ்பாபு கலந்து கொண்டனர்

Last Updated on Friday, 18 June 2010 11:47