தினமலர் 22.06.2010
பாதாள சாக்கடைத் திட்டம் முடிந்த இடங்களில் சிமென்ட் சாலை பணி துவக்கம் சேர்மன் ஜனகராஜ் தகவல்
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்த இடங்களில் புதிய சிமென்ட் சாலை பணி துவக்கப்பட்டுள்ளதாக சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.
விழுப்புரம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் பள்ளம் ஏற்படுத்தி பாதாள சாக்கடைக்குழாய் பதிக்கப்பட்டு பணிகள் பரவலாக நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டு வந்தது. சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்தவுடன் சாலைகள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கப்படும் என சேர்மன் ஜனகராஜ் உறுதியளித்திருந்தார். தற்போது பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள சாலைகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே உள்ள நவாப் தோப்பு சந்தில் 160 மீட்டர் தொலைவிலான சாலை 4 லட்சம் ரூபாய் மதிப்பில் முதன் முதலாக சிமென்ட் சாலை அமைக்கும் பணியை சேர்மன் ஜனகராஜ் நேற்று துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ், கவுன்சிலர்கள் வினோத், சுரேஷ்பாபு, ரகுபதி, கலைவாணன், சரவணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணிகள் குறித்து சேர்மன் ஜனகராஜ் கூறியதாவது, பாதாள சாக்கடைத்திட்டப் பணிகளைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் சிமென்ட் சாலை அமைக்க அரசிடம் 13 கோடி ரூபாய் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகளை முடித்து அனுமதி வழங்கும் இடங்களில் தற்போது சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நவாப்தோப்பு சந்தில் முதலாவதாக சாலைப் பணிகள் துவங்கியது. தொடர்ந்து கமலாநகர், கைவல்லியர் தெரு, மேல்வன்னியர் தெரு, இளங்கோவடிகள் தெரு என 10 இடங்களில் சாலைகள் போடப்படுகிறது. பாதாள சாக்கடைப் பணிகள் முடித்து அனுமதி வழங்கும் இடங்களில் தொடர்ந்து சாலைகள் படிப்படியாக போடப் பட உள்ளது. பாதாள சாக்கடை தொட்டிகளும் சாலை உயரத்திற்கு உயர்த்தப் பட்டு மக்களுக்கு எந்தவித பிரச் னையுமின்றி திட்டங்கள் முழுமைபடுத்தப்பட்டு வருவதாக சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.