தினகரன் 30.06.2010
பாதாள சாக்கடை திட்ட பணியால் பாதிப்பு சாலைகளை சீர்செய்ய ரூ.3.29 கோடி ஒதுக்கீடு
தர்மபுரி, ஜூன் 30: தர்மபுரியில், பாதாள சாக்கடை திட்ட பணியால் சிதிலமடைந்த சாலைகளை செப்பனிட ரூ.3.29 கோடி ஒதுக்கீடு செய்து, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி நகரமன்ற கூட்டம் தலைவர் ஆனந்தகுமார் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி பொறியாளர் செந்தில்குமார், தனி அலுவலர் தங்கையா, கணக்காளர் தனபால், நகராட்சி அலுவலர் மோகன், கவுன்சிலர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், அன்புக்கரசி, சலிமா சையத்உமர், ஜெயந்தி, புனிதா, தகடூர் வேணுகோபால், மாது, உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தர்மபுரி நகராட்சி தடங்கம் உரக்கிடங்கு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வின்ரோஸ் அமைக்க ரூ.25 லட்சமும், தண்ணீர் தொட்டி, வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன், காவலர் அறை கட்ட ரூ.20 லட்சமும் அனுமதிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி பச்சியம்மன் சுடுகாடு வளாகத்தில் ஈம சடங்குகள் செய்ய தேவையான அடிப்படை வசதிகள் செய்யவும், மின் வசதி செய்யவும் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிறுதொழில்கள் சொந்த கட்டிடத்தில் அல்லது மனையிடங்களில் செயல்பட்டால், அதற்கு குடியிருப்புகளுக்கு இணையாக சொத்துவரி விதிக்கவேண்டும். நகராட்சி தாய்சேய் நலவிடுதி பழுது பணிகள் மற்றும் மராமத்து பணிகள் செய்யவும், தேவையான உபகரணங்கள் வாங்கவும் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தர்மபுரி நகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணி ரூ.16.53 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. அதை ரூ.24.75 கோடியாக(மானியம் ரூ.8.27 கோடி) உயர்த்தப்படுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணியால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீர்செய்ய ரூ.3.29 கோடி ஒதுக்கீடு செய்வது என்பது உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.