Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ126 கோடி செலவில் நவீன இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி மாநகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 28.07.2010

ரூ126 கோடி செலவில் நவீன இயந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி மாநகராட்சி தீவிரம்

சென்னை, ஜூலை 28: நவீன இயந்திரம் மூலம் ரூ.126 கோடியில் சாலைகளை சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பேருந்து சாலைகளை மாநகராட்சி பேருந்து சாலைகள் துறை மூலமும், உட்புறச்சாலைகளை அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலமும் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நிதியாண்டில் 2,093 உட்புறச்சாலைகள் 542.26 கி.மீ. நீளத்திற்கு ரூ101.87 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளன. இதில் 435 உட்புறச்சாலைகள் 4.06 சதுர மீட்டர் பரப்பளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக ரூ3 கோடி செலவிடப்படுகிறது. இந்த பணிகளை மண்டல அலுவலகங்கள் மேற்கொள்கிறது. பேருந்து செல்லும் 153 சாலைகள் 50 கி.மீ. நீளத்திற்கு 40 மி.மீ. ஆழத்திற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இந்த பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ126 கோடி செலவில் சென்னையில் சாலைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. 29 பேருந்து சாலைகள் 10.78 கி.மீ. நீளத்திற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் செல்லும் சாலைகளான சூரிய நாராயண சாலை, நாராயண குரு சாலை, என்.எஸ்.கே.சாலை, போஸ்டல் காலனி 3வது தெரு ஆகிய சாலைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி சாலை, சிமெட்ரி சாலை, ராஜாஜி சாலை, எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, டிமலஸ் சாலை, கந்தசாமி சாலை, நியூ ஆவடி சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பாரதி சாலை, கௌடியா மடம் சாலை, எத்திராஜ் சாலை, லான்ஸ் கார்டன் சாலை, பின்னிசாலை, காமராஜர் சாலை, அசோக் நகர் 12வது நிழற்சாலை, பாரதிதாசன் காலனி பிரதான சாலை, வேளச்சேரி பிரதான சாலை, பக்தவச்சலம் சாலை, லஸ் சர்ச் சாலை, ஏஜிஎஸ் காலனி 4வது பிரதான சாலை, கல்கி கிருஷ்ண மூர்த்தி சாலை போன்ற பல்வேறு பேருந்து சாலைகள் அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேவர் இயந்திரம் மூலம் அகழ்ந்தெடுத்து புதுப்பிப்பு

பழைய தார்ச் சாலைகள் மேல் புதிய தார்ச்சாலைகள் போடுவதால் சாலைகளின் மேல் மட்டம் உயர்ந்து விடுகிறது. அருகில் உள்ள வீடுகள் பள்ளமாகி விடுகிறது. இதனால் மழைநீர் வீடுகளில் புகுந்துவிட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பேவர் இயந்திரம் மூலம் சாலைகளை தேவையான அளவிற்கு அகழ்ந்தெடுத்து புதுப்பிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் சாலையை 1.3 மீட்டர் அகலத்திற்கு 2 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவிற்கு தினமும் அகழ்ந்தெடுக்கமுடியும். இப்படி செய்வதால் மேடு, பள்ளம் இல்லாமல் சாலைகளை சமமாக அமைக்கமுடியும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.