தினமலர் 12.08.2010
3400 கி.மீ., பேரூராட்சி ரோடுகள் சீரமைப்பு
தேனி: பேரூராட்சி பகுதிகளில் ரோடுகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 3,400 கி.மீ., ரோடுகளை சீரமைக்க திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 560 பேரூராட்சிகளில் 13 சிறப்பு நிலை, தேர்வு நிலை 244, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் 303ஆக மொத்தம் 560 பேரூராட்சிகள் உள்ளன. 2010-11ல் அனைத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள ரோடுகளை புதுப்பிக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்படுகிறது. சிறப்பு நிலை பேரூராட்சிக்கு 20 கி.மீ., தேர்வு நிலை பேரூராட்சிக்கு 7 கி.மீ., முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பேரூராட்சிக்கு 5 கி.மீ., ரோடுகளும் போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரோடுகள் மேம்படுத்தும் சிறப்பு திட்டத்தில் மாநிலம் முழுவதும், பேரூராட்சி பகுதிகளில் 3400 கி.மீ., தூர ரோடுகள் போடுவதற்கு திட்ட மதிப்பீடுகள் கேட்கப்பட்டுள்ளது. புது ரோடுகள் போடுவதை தவிர்த்து, பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சேதமடைந்த ரோடுகளை, புதுப்பிக்க திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, இம்மாதம் 25க்குள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ரோடுகள் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.