தினமணி 16.08.2010
ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருக்காட்டுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பேரூராட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு பேரூராட்சிக் குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமை வகித்தார். செயல் அலுவலர் என். கலைச்செல்வன், தலைமைக் கணக்கர்கள் த. குணசேகரன், என். குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சித் தலைவர் பேசியது:
பேரூராட்சிக்குள்பட்ட அலமேலுபுரம், பழமார்நேரி, அப்பர்சாமி மண்டபம், ராயர் அக்ரஹாரம், சேதுரார் காலணி, குடமுருட்டி லயன்கரை தெரு சாலைகள் உள்ளிட்ட 16 இடங்களில் பேரூராட்சி சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு புதிய தார், சிமென்ட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
ஒன்பத்துவேலி, நடுப்படுகை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு, பயன்படுத்தப்பட்டு வரும் 5 குதிரைத்திறன் மின் மோட்டாருக்குப் பதிலாக 10 குதிரைத் திறன் கொண்ட 2 மின் மோட்டார்கள் வாங்கப்படும்.
விஷ்ணம்பேட்டை- அறந்தாங்கி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலமாக, குடிநீர் விநியோகக் குழாயிலிருந்து பேரூராட்சி சந்தைக்கு அருகேயுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் அனுமதி பெறப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:
என். கலைச்செல்வன் (செயல் அலுவலர்): திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக உள்ள சிற்றுண்டி நிலையத்தை இடிக்க வேண்டும்.
கர்ணன், தன்ராஜ் (அதிமுக): சிற்றுண்டி நிலையத்துக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு பணிகளை தொடர வேண்டும்.
டி.என். குணா (சுயேச்சை): புதுச்சத்திரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும். இதனால், கொசுத் தொல்லை அதிகளவில் உள்ளது.