தினகரன் 17.08.2010
மேயர் தகவல் பெங்களூர் சாலை பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
பெங்களூர், ஆக.17: பெங்களூர் மாநகராட்சி நிதி நிலையில் இறுக்கம் அடைந்துள்ளதால் நகரின் சில பிரதான சாலைகளை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மேயர் எஸ்.கே.நடராஜ் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சி விளம்பர நிறுவனங்கள் மோசடியால் நிதி இழப்பில் உள்ளது. எனவே சில பிரதான சாலைகளை விளம்பர ஏஜென்சிகளிடம் பராமரிப்புக்கு வழங்கிவிட முடிவு செய்துள்ளோம். வருவாய் பகிர்வு மாதிரியில் விளம்பர ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மாநகராட்சி, சில பிரதான சாலைகளின் பராமரிப்பை விளம்பர நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட முடிவு செய்துள்ளோம்.
இவர்கள் நகரத்தில் இலவசமாக விளம்பர பேனர்களை அமைத்துக்கொள்ளலாம். விளம்பர நிறுவனங்களுடன் நடந்த முதல்கட்ட ஆலோசனையில், விளம்பர ஏஜென்ஸிகள், சாலைகளை சுத்தம் செய்வார்கள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தத்தை பராமரிப்பார்கள்.
மேலும் பார்க்கிங் வசதிகளை கவனித்துக்கொள்ள விளம்பர நிறுவனமே வேலைக்கு ஆட்களை நியமித்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.
இந்த முடிவிற்கு நிறைய விளம்பர நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆய்வுக்காக சில பிரதான இடங்களில் உள்ள சாலைகளை விளம்பர நிறுவனங்களுக்கு ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் வெற்றிபெற்றால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் பராமரிக்க அனுமதி வழங்குவோம். இதனால் சட்டவிரோத விளம்பர பேனர்களால் மாநகராட்சிக்கு ஏற்படும் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும் என்றார்.