தினமலர் 19.08.2010
ரூ.50 லட்சத்தில்; சாலை சீரமைப்பு; வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூலிக்க முடிவு
திருநெல்வேலி: நெல்லை நயினார்குளம் மார்க்கெட் சாலை 50 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி நயினார்குளம் மார்க்கெட் சாலை நெடுஞ்சாலைத் துறையினரால் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலையில் நெல்லை காய்கறி சுங்க மொத்த விற்பனை அங்காடி, மிளகாய் வற்றல் மண்டி, பெரிய வாகனங்களை பராமரிப்பு செய்யும் பணிமனைகளும் உள்ளது. இந்த சாலை வழியாக மதுரை ரோட்டில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் கன ரக வாகனங்களும் செல்கிறது. தற்போது நயினார்குளம் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த பழுதடைந்த சாலையை 50 லட்சம் செலவில் பராமரித்து இரு புறமும் அகலப்படுத்தி கன ரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலையின் மத்தியில் வெள்ளைக் கோடுகள், பிரதிபலிப்பான்கள் அமைக்கவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சாலையை மேம்படுத்தி சாலையின் இருபுறமும் சுங்க சாவடிகள் அமைத்த சாலைகளை பயன்படுத்தும் வாகனத்திற்கு சுங்க கட்டணமாக கன ரக வாகனங்களுக்கு தலா 150 ரூபாயும், இலகு ரக வாகனங்களுக்கு தலா 100 ரூபாயும் வசூல் செய்து இத்தொகையின் மூலம் சாலையை சிறப்பான முறையில் பராமரிக்க மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பசுமை மாநகராட்சியாக மாறுகிறது நெல்லை; நிதி தொடங்க விரைவில் புதிய திட்டம்
திருநெல்வேலி: பசுமை மாநகராட்சியாக நெல்லையை மாற்ற விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சியை பசுமை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் புதியதாக உருவாக்கப்படும் மனை பிரிவுக்கு 1 மனைக்கு 2 மரக் கன்றுகள் வீதமும் மற்றும் பொது இடங்களை சுற்றி 15 அடி இடைவெளியில் ஒரு மரக் கன்று வீதமும் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வேலி அமைத்து முதல் மூன்று மாதங்கள் அந்த மனை பிரிவு உருவாக்கிய உரிமையாளரே பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநகராட்சி மூலம் இதனை பாதுகாக்க ஒரு ஆண்டிற்கு 50 மரக்கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இந்த மரக்கன்றுகளை கட்டமைப்பு வசதி உள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனம் மூலமும், மற்ற இடங்களில் சுய உதவி குழுக்கள் மூலமும் மாநகராட்சி பராமரிக்கும். இதனை போலவே 1,500 சதுர அடிக்கு மேல் கோரப்படும் கட்டட அனுமதிக்கு குடியிருப்புக்கு 2 மரக்கன்றுகள் வீதம் ஒரு முறை கட்டணமாக 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வேலி அமைக்கும் செலவினம் நிர்ணயம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். இந்த தொகையை மாநகராட்சியில் பசுமை நிதி என்ற தலைப்பில் புதிய கணக்கு தொடங்கி அதில் இருந்து மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிக்கும் பணிக்கு செலவிடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.