தினமலர் 19.08.2010
ரயில்வே மேம்பால பணிக்காக; நகராட்சி ஆர்ச் இடிக்க கலெக்டர் உத்தரவு
தென்காசி: தென்காசியில் ரயில்வே மேம்பால பணிக்காக நகராட்சி நகராட்சி ஆர்ச் கலெக்டர் உத்தரவுபடி இன்று(19ம் தேதி) இடிக்கப்படுகிறது. தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக ரோட்டின் இருபுறமும் இடிபடும் கட்டடங்கள் குறித்து சர்வே செய்யப்பட்டு அடையாள குறியீடு இடப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே ரோட்டில் உள்ள நகராட்சி ஆர்ச் இடிக்கப்படும். இதற்கான தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேற்று மாலையில் தென்காசிக்கு வந்து ரயில்வே மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாலத்திற்காக இடிபடும் நகராட்சி ஆர்ச், நகராட்சி கட்டடண கழிப்பிடம், அரசு அலுவலக கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். மேம்பாலம் கட்டுவதற்கு வசதியாக நகராட்சி ஆர்ச் மற்றும் நகராட்சி கட்டட கழிப்பிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இப்பணி இன்று (19ம் தேதி) நடக்கிறது. மேலும் இடிபடும் கட்டடங்களின் மதிப்பு குறித்த அறிக்கையை வரும் 23ம் தேதிக்குள் வழங்கும்படியும், இடிபடும் கட்டடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்கள் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தென்காசி ரயில்வே ரோட்டில் உள்ள ஆர்ச் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1911ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அப்போதைய ஐந்தாம் ஜார்ஜ் மேரி அம்மா என்பவரால் திறக்கப்பட்டது. 99 வயதுடைய ஆர்ச் நூற்றாண்டை காண்பதற்கு முன்னர் இன்றுடன் தன் ஆயுளை முடித்துக் கொள்கிறது.