தினமணி 20.08.2010
ராமநாதபுரத்தில் அனைத்து சாலைகளும் ரூ.12.30 கோடியில் சீரமைக்கப்படும்
ராமநாதபுரம், ஆக. 19: ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் ரூ.12.30 கோடி மதிப்பில் விரைவில் சீரமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஆர்.லலிதகலா ரெத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் முஜ்புர் ரகுமான் முன்னிலை வகித்தார். நகர்மன்றத் தலைவர் பேசியது:
ராமநாதபுரம் நகரில் உள்ள 97 சாலைகள் இரண்டே மாதங்களில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.12.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு இணைப்புக் கட்டணம் செலுத்தாதவர்கள் சாலைகள் சீரமைக்கும் முன்பாகவே அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். 33 வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையரின் சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவில் விருது வழங்கி கௌரவித்திருப்பது நகராட்சிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜாஉசேன், அதிமுக உறுப்பினர்கள் டி.ஆர்.சீனிவாசன், வீரபாண்டி ஆகியோரும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.
நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பலராமன், முனியசாமி, நாகஜோதி, கண்மனி, வீரபாண்டி உள்பட பலரும் நகரின் வளர்ச்சி குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர்.