தினமணி 26.08.2010
சிறப்பு சாலைத் திட்டத்துக்கு சாலைகளைத் தேர்வு செய்யும் பணி
திருச்சி, ஆக. 25: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு சாலைத் திட்டம் 2010-11-ன் கீழ் மேம்படுத்தப்படவுள்ள சாலைகள் தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யும் நிதியிலிருந்தும், மாநகராட்சி பொது நிதியிலிருந்தும், ஜெர்மானிய வங்கியின் நிதியுதவி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான நீடித்த நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தற்போது திருச்சியில் மாநகராட்சி சிறப்பு சாலைத் திட்டம் 2010-11 இன் கீழ் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொளள நகராட்சி நிர்வாக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலைகள், புதைச் சாக்கடை மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள், இயற்கை இடர்பாடுகளால் பழுதடைந்த சாலைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நான்கு கோட்டங்களிலும் சாலைகளைத் தேர்வு செய்யும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆணையர் த.தி. பால்சாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் ஆர். சந்திரன், எஸ். அருணாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.