தினகரன் 27.08.2010
தலைமை பொறியாளர் தகவல் 7 நகராட்சிகளில் 200 கிமீ சாலை அமைக்கப்படும்
அருப்புக்கோட்டை, ஆக.27: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு நகராட்சிகளில் சிறப்பு சாலை திட்டத்தில் 200 கிமீ., சாலைகள் அமைக்கப்படும் என தமிழக நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் கூறினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் டெலிபோன் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, விவிஆர் காலனி உள்ளிட்ட பகுதிகளை தமிழக நகராட்சிகளின் தலைமை பொறியாளர் ரகுநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், ‘சிறப்பு சாலைத்திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் 25 கிமீ., திருவில்லிபுத்தூர் 25 கிமீ., திருத்தங்கல்லில் 20 கிமீ., ராஜபாளையத்தில் 40 கிமீ., விருதுநகரில் 40 கிமீ., சாத்தூரில் 20 கிமீ., சிவகாசியில் 30 கிமீ., உள்பட ஏழு நகராட்சிகளில் மொத்தம் 200 கிமீ., சாலை அமைக்கப்பட உள்ளது.
பழைய ரோடுகளை புதுப்பித்தல், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை புதிதாக அமைத்தல், குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள், நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் உள்பட சாலைகளை புதிதாக அமைக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது‘ என்றார்.
ஆய்வின்போது மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், மண்டல பொறியாளர் கனகராஜ், நகராட்சி பொறியாளர் ரவீந்திரன் உடன் இருந்தனர்.