தினகரன் 31.08.2010
15 வேலம்பாளையம் நகராட்சியில் தார் சாலைகள் அமைக்க தீர்மானம்
திருப்பூர், ஆக. 31: 15 வேலம்பாளையம் நகராட்சியில் அவசரக் கூட்டம், கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் எஸ்.பி.மணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் குற்றாலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு:
கோட்டா பாலு: (அதிமுக):
நகராட்சிக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் எப் போது திறக்கப்படும். துணை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே திறந்து வைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நகராட்சி புதிய கட்டடம் முன்பு பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவசிலை அமைக்க வேண்டும்.
விஜயா செல்வராஜ் (இ.கம்யூ):
ஆழ்குழாய் கிணறு அமைத்து 7 மாதத்திற்கு மேலா கிறது. குடிநீர் பிரச்னையை எப்போது தீர்த்து வைப்பீர்கள்?.
திலகர் நகர் சுப்பு:
திலகர் நகர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.ஏ.,பள்ளியில் இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.
நாகராஜ் (மதிமுக):
எனது வார்டில் போடப்பட்டு வரும் தார்சாலையில் அரை இன்ச் ஜல்லி கற்களுக்கு பதிலாக 3 இன்ச் ஜல்லி கற்கள் போடு வதை பார்த்த பொதுமக்கள், வேலையை தடுத்து நிறுத்தி உள்ளனர். நன்றாக வேலை செய்யாத ஒப்பந்ததார்களை நீக்க வேண்டும்.
நடராஜ் (பாஜக):
சாமுண்டிபுரம் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் காம்பவுண்டு சுவர் இதுவரை கட்டப்படவில்லை. பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். நகராட்சியாக மாறிய பின்பும் பள்ளியை ஒப்படைக்க மறுக்கும் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரை கண்டித்து தீர்மானம் போடவேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, நகராட்சித் தலைவர் மணி, செயல் அலுவலர் குற்றாலிங்கம் ஆகியோர் பேசுகையில், ‘15 வேலம்பாளையம் நகராட்சி புதிய கட்டடத்தில் பேரறிஞர் அண்ணா சிலை வைக்கப்படும். குடிநீர் பிரச்னை அனைத்து பகுதிகளிலும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் அழகேசன், ரகுபதி ஆகியோர் செய்யும் வேலையை ரத்து செய்ய உள் ளோம்’ என்றனர்.தொடர்ந்து 2010&11ம் ஆண்டு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ4 கோடி மதிப்பில் தார் சாலை அமைப்பது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.