தினகரன் 31.08.2010
குளச்சலில் பழுதான சாலைகள் ரூ2.50 கோடியில் சீரமைப்பு
குளச்சல், ஆக. 31: குளச்சல் நகராட்சி பகுதியில் பழுதான 33 சாலைகளை ரூ2.50 கோடியில் சீரமைப்பது என நகர்மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. குளச்சல் நகர்மன்ற சிறப்பு அவசரக் கூட்டம் தலைவர் ஜேசையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் லதாராபின்சன், ஆணையர் சர்தார், மேலாளர் சிந்தாமதார், பொறியாளர் கன்னையா, சுகாதார அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய அமைப்பாளர் நாகராஜன் அஜெண்டா வாசித்தார்.
கூட்டத்தில் குளச்சல் நகராட்சி பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் மிகவும் சேதமடைந்து பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள 33 சாலைகளை 2010 &2011ம் ஆண்டிற்கான சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ2 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் சீரமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.