னகரன் 31.08.2010
அரியலூரில் ரூ3 கோடியில் சாலை நகராட்சி கூட்டத்தில் தகவல்
அரியலூர், ஆக. 31: அரியலூரில் ரூ3 கோடியில் சாலைப்பணி நடைபெற உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அரியலூர் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் 20 பணிகள் மேற்கொள்வதற்காக சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் பல உறுப்பினர்கள் எழுந்து தங்களை கலந்துஆலோசித்து பணிகள் தேர்வு செய்யப்படவில்லை என்று புகார் கூறினர்.
3வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் பேசுகையில், 3,7,2 ஆகிய வார்டுகளில் சாலைகளை அளக்காததால் பணிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. முழு ஆய்வு செய்ததும் மன்றத்தில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
17வது வார்டு கவுன்சிலர் பாபு பேசுகையில், பல ஆண்டுகளாக கருணாநிதிநகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மண்சாலைகளை தார் சாலை களாக மாற்றகோரிக்கை விடுத்தும் நிறைவேற்ற வில்லை என்றார். பணிகளை தேர்வு செய்த பின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூறினர். இதற்கு நகராட்சி செயல் அலு வலர் சமயச்சந்திரன் பதில் அளிக்கையில், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் இப்பணிகள் தேர்வுசெய்யப்படுகிறது. அதன்படி
ரூ3கோடியில் 20 கி.மீ. தூரம் சாலை பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரி, கோயில், பள்ளி, அரசு அலுவலகங்கள், மார்க்கெட், தொழிற்சாலை, சுற்றுலாத்தலம், பஸ்கள் செல்லும் சாலை
ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு சாலையாகவும், 5 வருடத்திற்கு முன்னர் போடப்பட்ட தார் சாலை அல்லது சிமென்ட் சாலைகளை சீரமைக்கவும் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. நிபந்தனைகளின்படி தேர்வு செய்யப்படும் சாலைகள் மன்ற ஒப்புதலுக்கு பின் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
நகராட்சித்தலைவர் விஜயலட்சுமி செல்வராஜன் பேசுகையில், அனைத்து கவுன்சிலர்களையும் கலந்து ஆலோசித்து முழு அளவில் பணிகள் தேர்வு செய்யப்பட்ட பின் கூட்டம் நாளை (இன்று) நடைபெறும் என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
கூட்டம் தொடங்கும் முன் 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிவஞானம் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து கொண்டு தனது வார்டுக்கு அடிப்படை பணிகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரசேகர் தனது வார்டு கருணாநிதி நகர், காமராஜர் நகர் பகுதிகளில் மண் சாலையை தார் சாலையாக்கக்கோரி நகராட்சியின் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினார்.
2வது வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில், தற்போதைய சிறப்பு சாலை திட்டத்தின் 20 பணிகளில் காங்கிரஸ் கட்சி 3 கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு ரூ60 லட்சம், பிற வார்டுகளுக்கு ரூ40லட்சத்திலும் பணிகள் ஒதுக்கியுள்ளனர் என்றார். உடனே காங்கிரஸ், திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, மணிவண்ணன், ராஜா, பாபு, ராமு, பழனிச்சாமி, குணா, சந்திரசேகர், மலர்க்கொடிமனோகரன், ஜெயலட்சுமி ராஜேந்திரன், தவமணிகோவிந்தன், நகராட்சி அலுவலர் குமரன், ஓவர்சீயர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.