தினமலர் 21.09.2010
மதுரையில் ரோடுகள் சீரமைப்பு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க அரசு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. பாதாளசாக்கடை, மழைநீர் வடிகால், வைகை குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்காக நகர் பகுதியில் குழிகள் தோண்டப்பட்டன. இதனால் பல ரோடுகள் சேதமடைந்தன. 140 கி.மீ., தூரத்திற்கு ரோடுகளை மேம்படுத்தும் பணிக்காக 43 கோடி ரூபாய் தேவை என, மாநகராட்சி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த அரசு 114 கி.மீ., தூரத்திற்கு ரோடுகளை மேம்படுத்த 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ரோடுகள் மேம்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது.
தலைமை பொறியாளர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் பங்கேற்றனர். பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து தார் ரோடு அமைக்கவும், இதற்காக அக்., முதல் வாரத்தில் டெண்டர் விடுவதற்கும் முடிவு செய்யப்பட்டன.