திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி மானியமாக துணை முதல்வர் வழங்கியுள்ளதாக மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.தமிழகம் முழுவதும் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்போது பராமரிக்கப்பட்டு வரும் ரோடுகளின் நீளம் 868.24 கி.மீ. குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை பணி காரணமாக அவ்வப்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கினாலும் ரோடுகள் சீரமைக்கப்படவேண்டியது அவசியமாக உள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு அரசு மானியமாக வழங்கியுள்ளது. இந்த நிதியினை என்னிடம் (மேயரிடம்) தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி, நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், நெல்லை மாகராட்சி கமிஷனர் சுப்பையன் உடனிருந்தனர்.
ரோடு போடும் பணிகளை மேற்கொள்ள அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. வழிகாட்டு நெறிமுகைளுக்கு உட்பட்டு பல்வேறு பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டு ரோடு பணிகள் தொடங்கப்படும். பணிகள் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படும்.பாளை., யில் தீம் பார்க் அமைக்க கன்சல்டண்ட் நியமிப்பது சம்பந்தமாக 4 இண்டர்நேஷனல் கம்பெனிகளிடம் இருந்து டெண்டர்கள் வந்துள்ளன. இதில் கன்சல்டண்டாக நியமிக்கப்படும் கம்பெனி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். மார்ச் மாதத்திற்குள் பணிகள் துவங்கப்படும். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.பேட்டியின் போது கமிஷனர் சுப்பையன், மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், சுப.சீத்தாராமன், முகம்மதுமைதீன், கவுன்சிலர்கள் சுப்பையாபாண்டியன், பிராங்ளின் உடனிருந்தனர்.