தினகரன் 22.09.2010
ரோடுகள் புதுப்பிக்க ரூ6கோடி நிதி துணை முதல்வர் வழங்கினார்
பொள்ளாச்சி, செப். 22: பொள்ளாச்சி நகரில் உள்ள ரோடுகளை புதுப்பிக்க துணைத் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து ரூ. 6 கோடி நிதியினை நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பெற்றார்.
பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் ரோடுகள் பழுதடைந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரோடுகள் ஆங்காங்கு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண நகரின் முக்கிய பகுதிகளில் புதிதாக தார் ரோடு போட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கென ரூ. 6 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மேம்பாட்டுக்கென முதல்வர் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்தார். அந்த நிதியில் இருந்து பொள்ளாச்சி நகராட்சிக்கு ரூ. 6 கோடி வழங்குவதாக அரசு அறிவித்தது. இந்த நிதியினை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நகராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பெற்றார். அப்போது நகராட்சி நிர்வாக செயலர் அசோக்வர்தன் ஷெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலரும் உடன் இருந்தனர்