தினமணி 22.09.2010
65 கி.மீ. சாலையை புதுப்பிக்க ரூ. 25 கோடி அரசு ஒதுக்கீடு: மேயர்திருநெல்வேலி
,செப்.21: திருநெல்வேலி மாநகர் பகுதியில் 65 கி.மீ. சாலையைப் புதுப்பிக்க அரசு ரூ. 25 கோடி ஒதுக்கியுள்ளதாக, மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
திருநெல்வேலி மாநகராட்சி தற்போது 868.24 கி.மீ. சாலையைப் பராமரித்து வருகிறது. இச் சாலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் புதிய குடிநீர்த் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி, மழை, வெள்ளம் ஆகியவற்றால் பல சாலைகள் பழுதடைந்துள்ளன. அவற்றைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதன் விளைவாக சாலைப் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். அரசிடமும் வலியுறுத்தி வந்தோம்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சாலைகளைச் சீரமைக்க அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந் நிதியில் இருந்து, திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என கூறினோம். இதற்காக நகரில் தற்போது மோசமாக இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து, அதைச் சீரமைக்க ஆகும் செலவு, காலம் போன்ற தகவல்களுடன் மாநகராட்சி உயர் அதிகாரிகள், உள்ளாட்சித் துறை உயர் அதிகாரிகளை சந்தித்தனர். இதையடுத்து, மாநகராட்சி சாலைகளைச் சீரமைக்க ரூ. 25 கோடி வழங்குவதாக அரசு ஆணை பிறப்பித்தது. ஆணையை கடந்த 18-ம் தேதி துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் என்னிடம் தந்தார்.
அரசு மானியமாக வழங்கியுள்ள இந் நிதியைக் கொண்டு, சிமென்ட், தார் சாலைகள் புதிதாக அமைக்கப்படும். சாலைகள் புதுப்பிக்கும் பணி இந்த நிதியாண்டுக்குள் நிறைவடையும். இதேபோல, பாளையங்கோட்டை இலந்தகுளத்தில் தீம் பார்க் அமைக்கும் திட்டத்துக்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்படும். மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வ.உ.சி. கட்டடம் விரைவில் இடிக்கப்பட்டு, புதிய கட்டடத்தின் தரைதளம் இந்த ஆட்சிக் காலத்துக்குள் கட்டப்படும் என்றார் அவர்.
பின்னர், மாநிலத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த, திருநெல்வேலி நகரம் கல்லணை மேல்நிலைப் பள்ளி மாணவி ஜாஸ்மினுக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகையை மேயர் வழங்கினார்.
மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன், மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன், சுப. சீதாராமன், எஸ்.எஸ். முகம்மது மைதீன், உதவி ஆணையர் (பொறுப்பு) எல்.கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.