தினமணி 23.09.2010
உடுமலையில் திட்டச் சாலைப் பணிகள் துவக்கம்
உடுமலை, செப்.22: புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக உடுமலை நகராட்சியின் சார்பில் பணிகள் புதன்கிழமை துவங்கின. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரத்தை அ ன்றாடம் ஆயிரக்கணக்கான கன ரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும் நாளு க்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தடுக்க உடுமலை நகரில் புறவழிச்சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஏற்கெனவே உள்ள திட்டச் சாலையில் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு ஒரு புறவழிச்சாலை அமைக்க உடுமலை நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக உடுமலை நகரை ஒட்டி கிழக்குப் பகுதியான வெஞ்சமடையில் இருந்து மேற்கே உள்ள மின் மயானம் வரை சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு இந்த திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வெஞ்சமடையில் இருந்து எஸ்வி மில் பின்புறம் தொடங்கி ஜோதி நகர், ஐஸ்வர்யா நகர், அனுசம் தியேட்டர் பின்புறம் வழியாக திருப்பூர் ரோடு வரை 100 மீட்டர் சாலையாகவும், அதன் பிறகு இங்கிருந்து பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள மின் மயானம் வரை 60 அடி சாலையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டது.
புறவழிச்சாலை அமையவுள்ள சுமார் 5 கி.மீ. நீளத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அந்த நிலங்களை கையகப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நகராட்சி அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் இதற்கான சர்வே பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புறவழிச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கியது. உடுமலை நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள், பொறியாளர் செந்தில்குமார், சர்வேயர் அழகிரிசாமி மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர்.
இது குறித்து உடுமலை நகராட்சி தலைவர் செ.வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறி யது: முதல் கட்டமாக திருப்பூர் சாலை முதல் தாராபுரம் சாலை வரை சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு இந்தப் பணிகள் நடைபெறும். திட்டச் சாலையின் அகலம் 100 அடியாக இருக்கும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பொக்லைன் எந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது. நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். பிறகு நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணிகள் நிறைவு பெற்றபின் உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றார்.