தினமணி 28.09.2010
திண்டுக்கல் நகராட்சியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ 10 கோடி
திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் நகராட்சியில் சாலைகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ 10 கோடி நிதி வழங்கி உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி ஆணையை வருவாய் துறை அமைச்சர் இ. பெரியசாமி திங்கள்கிழமை நகராட்சி ஆணையர் அர. லட்சுமியிடம் வழங்கினார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையை வழங்கிய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் சாலைகளை மேம்படுத்த அரசு நிதி வழங்கி வருகிறது. திண்டுக்கல் நகரில் நடைபெற்றுவரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் காரணமாக நகரில் சில சாலைகள் தோண்டப்பட்டன.
தற்போது இத் திட்டம் பெருமளவு முடிவுற்று வருகிறது. நகரில் சாலைகளை மேம்படுத்த வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு ரவுண்டு ரோடு சாலை, மெயின் ரோடு, பெல்பர்க் சாலை, ஸ்கீம் ரோடு உள்ளிட்ட 8 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்படும். மேலும் 10 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் பேவர் ரோடுகளாக அமைக்கப்படும்.
ரூ 1.8 கோடி மதிப்பில் ரவுண்டு ரோடு சாலையும், அதில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக தனிப் பாதைகள், ஓய்வு இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். ரூ. 2.6 கோடியில் ராணி மங்கம்மாள் சாலையின் நடுவே விளக்குகள் அமைத்து, அவற்றை இருவழிச் சாலைகளாகத் தனியாகப் பிரித்து தரம் உயர்த்தப்படும். இதைத் தவிர, முக்கியச் சாலைகளை இணைக்கும் துணை சாலைகளும் புதிதாக அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, பொறியாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.