தினகரன் 06.10.2010
பம்மல் நகராட்சியில் ரூ1.5 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு
தாம்பரம், அக். 6: சாலைகளை புதுப்பிக்க மாநில அரசு ரூ1.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று பம்மல் நகராட்சித் தலைவர் வே.கருணாநிதி கூறினார்.
மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தரமற்ற சாலைகளைப் புதுப்பிக்க, ரூ1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதற்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிடம் திட்ட மதிப்பீடு கோரப்பட்டது. பம்மல் நகராட்சி சார்பில் 86 சாலைப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, ரூ8 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரம் அளவுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டது. இதற்கு முதல்கட்டமாக ரூ1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் நிதியை மாநில அரசு நகராட்சிக்கு வழங்கியுள்ளது.
இந்த நிதியின் மூலம் அகத்தீஸ்வரர் கோயில் தெரு, தேவதாஸ் தெரு மழைநீர் வடிகால்வாய், அண்ணா சாலை சிமென்ட் சாலை, கம்பர் தெரு மற்றும் புகழேந்தி தெருவுக்கு மழைநீர் வடிகால்வாயுடன் சாலை, கண்ணதாசன் மற்றும் என்.எஸ்.கே. தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் வே.கருணாநிதி தெரிவித்துள்ளார்.