தினமணி 11.10.2010
ஒட்டன்சத்திரம் பை-பாஸ் சாலை ரூ 60 லட்சத்தில் சீரமைப்பு
ஒட்டன்சத்திரம், அக். 10: ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி பை-பாஸ் சாலை ரூ 60 லட்சம் செலவில் சீரமைக்கும் பணியை, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-நாகணம்பட்டி பை-பாஸ் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.
இது குறித்து, கடந்த சில தினங்களுக்கு முன் தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையறிந்த, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவரிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.பின்னர், இச்சாலையை உடனடியாக சீரமைக்க ரூ 60 லட்சம் நகராட்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, சாலை சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை அவர் தொடங்கிவைத்தார். இதேபோல், நகராட்சிக்குள்பட்ட 10-வது வார்டில் ரூ 16 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார் அர. சக்கரபாணி. இந்நிகழ்ச்சியில், நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் மோகன், நகராட்சிக் கவுன்சிலர் பி.கே. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.