தினகரன் 13.10.2010
தூத்துக்குடி நகரில் ரூ.20.34 கோடியில் சாலை சீரமைக்க முடிவு
தூத்துக்குடி, அக். 13:தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜ கோபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடிக்கு சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதும் பாஜ கவுன்சிலர் பிரபு, தூத்துக்குடி சப்&கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள ஆஷ் துரை நினைவு பூங்காவை பராமரித்தல் தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்பூங்காவிற்கு வஉசியின் பெயரை சூட்டி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கூட்டரங்கில் இருந்து வெளியேறினார். மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிப்பது, ரூ.20.34 கோடியில் 50 முக்கிய தார்சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.