Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிதிப் பற்றாக்குறை பாதியில் நிற்கும் சிமென்ட் சாலை

Print PDF

தினமணி 13.10.2010

நிதிப் பற்றாக்குறை பாதியில் நிற்கும் சிமென்ட் சாலை

கடலூர்: நிதிப் பற்றாக்குறையால் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பணிகள் டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக கடலூர் நகரில் தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அதன்பிறகு செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அனைத்தையும் செப்பனிட 20 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு 1000 கோடி வழங்க தீர்மானித்தது. இதைத்தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் 131 சாலைப் பணிகளுக்கு 15 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 40 சாலைப் பணிகளுக்கு மட்டும் 10.1 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் திட்டமிட்டபடி அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. நிதி பற்றாக்குறையால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர் வார்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் வார்டு என்று பாகுபாடு பார்த்து பணிகளை வழங்கும் சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சில வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சாலைப்பணிகள் பல, நிதி பற்றாக் குறையாலும், பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாலும் பாதியிலேயே நிற்கிறது.

அத்தகைய பணிகளில் ஒன்றுதான் 34-வது வார்டு செல்லங்குப்பம் இணைப்புச் சாலை. 12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் தொடங்கப் பட்டது. சாலைகளின் ஓரங்களில் செங்கல் கட்டுமானம் எழுப்பி, சாலையில் ஆற்று மணல் கொட்டும் வேலை முடிவடைந்தது.

அதற்கு மேல் சிமென்ட் தளம் அமைக்கும் வேலை 2 மாதங்களாகியும் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி வார்டு உறுப்பினரிடம் கேட்டபோது, "நகராட்சி பொது நிதியில் நடைபெற்றுள்ள இந்தப் பணிக்கு இதுவரை நகராட்சி நிதி தரவில்லை என்று ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இனி பணம் கிடைத்தால்தான் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' கூறினார்.

இதேபோல் மேலும் பல பணிகள், டெண்டர் விட்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடப்பதாக நகராட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.