தினமணி 18.10.2010
" ரூ. 17 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்'
திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் நகரில் ரூ. 17 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மாநில வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவடைந்த பின்னர்தான் சாலைகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கும். ஆனால், இப்பணிகள் முடிவடைவதற்கு முன்னரே, சாலை அமைப்பதற்காக ரூ. 10 கோடியை சிறப்பு சலுகையாக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
மேலும், மிகவும மோசமாக உள்ள அரண்மனைக்குளம் சாலையை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் புதுப்பிப்பதற்காக தனியாக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.