தினகரன் 20.10.2010
ரூ1 கோடியில் சாலைப்பணி தாந்தோணி நகராட்சியில் விரைவில் துவக்கம்
கரூர், அக்.20: தாந்தோணி நகராட்சியில் ரூ.1கோடியே 6லட்சம் செலவில் பழுதான சாலைகள் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.
தாந்தோணி நகராட்சி பகுதியில் 2010&2011ம் ஆண்டிற்கான சிறப்பு சாலைகள் திட்டத்தில் இயற்கை சீற்றத்தால் பழுதான சாலைகளை செப்பனிடும் பணிக்கு பழுதான தார் சாலைகளை தேர்வு செய்து சாலைப் பணிகளை மேற்கொள்ள நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அறிவித்திருந்தார். அதன்படி தாந்தோணி நகராட்சி நிர்வாகம் பணிகளை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ரூ.1 கோடியே 6லட்சம் நிதி அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தாந்தோணிமலை பெருமாள் கோயிலை சுற்றியுள்ள தேர்வீதியில் தார்தளம் அபிவிருத்தி செய்தல், தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி சாலை சந்திப்பு முதல் கரூர்&ஈசநத்தம் மெயின்சாலை இணைப்பு வரை தார்சாலை, குமரன்சாலை இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு சிமென்ட் தளம் மற்றும் வடிகால் அபிவிருத்தி செய்தல், ராயனூர் பழைய ஓஎச்டி தென்புறம் உள்ள கிழமேல் மெயின்சாலை, வெள்ளகவுண்டன்நகர் மெயின்சாலை சந்திப்பு, மூன்று குறுக்குதெருக்களுக்கு சிமென்ட தளம் மற்றும் வடிகால் அமைத்தல்.
காமராஜ்நகர் முதல்தெரு மெயின்சாலை, தென்வடல் சாலையில் தார்தளம் அமைத்தல், பாரதிதாசன் நகர் தென்வடல் சாலை மற்றும் கிழமேல் குறுக்கு சாலை சிமென்ட் தளம், வடிகால், கல்வெர்ட் அமைத்தல், ஜீவாநகர் புதிய ரேஷன்கடை கிழமேல் மற்றும் தென்வடல் சாலை தார்தளம் அமைத்தல், திண்ணப்பாநகர் விஸ்தரிப்பு தென்வடல் சாலையில் தார் தளம் அமைத்தல், கரூர்&திண்டுக்கல் சாலை சந்திப்பு முதல் (டிஎன்எச்பி அருகில்) பெருமாள் கோயில் தெற்கு தேர்வீதி சந்திப்பு வரை சிமென்ட் தளம் அமைத்தல், காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இரட்டை சாலை, மேற்கு பகுதி தார்சாலைகள் அபிவிருத்தி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தீர்மான முன்மொழிவு நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.