தினகரன் 26.10.2010
விழுப்புரம் மேலவீதியில் தார்சாலைஅமைக்கும்பணி சேர்மன் ஜனகராஜ் பார்வையிட்டார்
விழுப்புரம், அக். 26: விழுப்புரம் மேலவீதியில் (சென்னை நெடுஞ்சாலை) பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்ட பணிகளால் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் அவசர அவசரமாக போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது. சாலை சீரமைக்கப்படாததால் மண் புழுதி பறந்து வாகன ஓட்டிகளை மிரட்டியது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலவீதியின் சாலையை சீரமைக்க போர்க்கால அப்படிடையில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி சென்னை நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.1 கோடி தமிழக அரசிடம் நிதி பெறப்பட்டு நகராட்சி மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சாலை அமைக்க பாதாள சாக்கடை திட்ட பணிகளை முன்னின்று நடத்தி வரும் குடிநீர் வடிகால் வாரியம் அனுமதித்தது. அதன்படி மேலவீதியில் கடந்த 2 நாட்களாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பார்வையிட்ட நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் கூறுகையில், சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் சாலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தோம். அதன்படி அமைச்சர் பொன்முடியின் நடவடிக்கை காரணமாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடிந்த இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும், என்றார். ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் திருப்பதிபாலாஜி, கவுன்சிலர் ஸ்ரீவினோத் மற்றும் பலர் உடனிருந்தனர்.