தினமணி 02.11.2010
ஆரணியில் ரூ. 3 கோடியில் சிமென்ட் சாலை
ஆரணி, நவ.1: ஆரணியில் ரூ. 3 கோடி மதிப்பிலான சிமெண்ட் சாலை மற்றும் தாற்காலிக பழ மார்க்கெட் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
ஆரணியில் காந்தி சாலை, சத்தியமூர்த்தி சாலை ஆகிய இரண்டு சாலைகளும் சிமென்ட் சாலைகளாக மாற்றப்பட்டன. இவற்றைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியது:
ஆரணியில் ரூ. 16 கோடியே 10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, நகரின் குடிநீருக்காக ஆர்க்காடு பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்தல், பழைய பஸ் நிலையத்தை புதுப்பித்தல், புதிய பஸ்நிலையத்தை சீரமைத்தல், நவீன எரிவாயு தகனமேடை, சாலையின் இருபக்கமும் மின்விளக்கு உள்ளிட்ட 12 பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகராட்சியின் பல்வேறு பணிகளுக்காக ரூ. 4 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரணிக்கு காவிரி நீர் விரைவில் வரவுள்ளது என்றார்.
விழாவுக்கு ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சாந்தி லோகநாதன், ஆணையர் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மேற்குஆரணி ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், திமுக நகரச் செயலர் ஏ.செல்வரசு, ஒன்றியச் செயலர் எஸ்.எஸ்.அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.